Thursday 29 November 2012

ஐந்தறிவா, ஆறறிவா?





’புதிய தலைமுறை’ 29 நவம்பர் 2012 இதழில் ‘வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி’ என்ற தலைப்பில் வெளிவந்த என் கட்டுரை.

புதிய தலைமுறை பத்திரிகைக்கு என் மனமார்ந்த நன்றி.
உங்களுக்கு படிக்க சிரமமாக இருக்கும் என்பதால் மீண்டும் கட்டுரையை இங்கு பதிகிறேன்.






ஒரு நாள் காலையில் பரங்கி மலை ரயில் நிலையத்தில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல மின்சார ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த போது, எதேச்சையாக நிமிர்ந்து மேலே பார்த்தேன். நடைமேடையின் மேற் கூரையில் உள்ள கம்பங்களுக்கு இடையே அழகான ஒரு கூடு.
காசு வேண்டாம், பணம் வேண்டாம், வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டாம், வங்கிக் கடன் வேண்டாம், செங்கல் வேண்டாம், சிமென்ட் வேண்டாம், மனைவி கிட்ட இருந்து “போயும் போயும் இங்க வந்து வீடு கட்டி இருக்கீங்களே, ரயில் சத்தத்தில தூங்க முடியலையேன்னு” திட்டும் வாங்க வேண்டாம். (வீட்டைக் கட்டினதே அம்மா காக்காதானேன்னு சொல்லறீங்களா, இருக்கலாம்). கொஞ்சம் துடைப்பக் குச்சிகள், தேங்காய் நார், கம்பிகள் இத்யாதி இத்யாதி - அழகான வீடு தயாராகிவிட்டது. வீட்டுக்குள் ரொம்பவும் மெத்த்தென்று இருக்குமோ. அம்மாவோட பழைய பருத்திப் புடைவையில் நம்ப வீட்டுக் குழந்தைகள் படுத்துத் தூங்குமே அந்த மாதிரி. எனக்கு ஆசைதான் கூட்டுக்குள்ள எட்டி பார்க்க. அவ்வளவு உசரத்தில நான் எங்க ஏறி பார்க்கறது. தினமும் காலையிலும், மாலையிலும் கூட்டை கவனித்துக் கொண்டிருந்தேன். சிறிது நாட்களில் நான்கு ரோஸ் நிற அலகுகள் மட்டும் வெளியே தெரிய ஆரம்பித்த்ன. அது என்ன அதிசயம். இந்தக் குஞ்சுகளுக்கு எப்போதுமே அகோரப் பசியாக இருக்குமா என்ன? ஆ, ஆ என்று திறந்த வாய் திறந்த படியே எனக்கு, எனக்கு என்று பறப்பது போல் இருந்தது. ஒருவேளை அம்மா பறந்து பறந்து கொண்டு வந்து ஊட்டும் தீனி போதவில்லையோ!. பின்ன என்ன நாலு வாய் (வயிறு) அல்லவா? அம்மா காக்காவும் நான் பார்க்கும் போதெல்லாம் சளைக்காமல் பறந்து போவதும் எதையோ மூக்கில் கொண்டு வந்து ஊட்டுவதுமாகவே இருந்தது.
சின்ன வயதில் அத்தையும் பாட்டியும் கல்சட்டியில் சாதம் பிசைந்து வைத்துக்கொண்டு நாம எல்லாம் சுற்றி உட்கார்ந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு கையில் வாங்கி சாப்பிடுவோமே அதுதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
இன்னும் கொஞ்ச நாட்களில் நாலு முழு காக்கைக் குஞ்சுகளும் வெளியில் தெரிய ஆரம்பித்தன. ஆனால் அலகு மட்டும் இன்னும் ரோஸ் நிறத்தில்தான் இருந்தன. அது என்னவோ மந்திரத்திற்குக் கட்டுப் பட்டது போலவோ, அம்மா காக்கையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட்து போலவோ என்னவோ நான்கு காக்கைக் குஞ்சுகளும் கூட்டிற்குள்ளேயே இருந்தன.
அதில் மூன்று காக்கைக் குஞ்சுகள் அடுத்த சில நாட்களில் கொஞ்சம் கூட்டைவிட்டு வெளியே தத்தித் த்த்தி வந்திருந்தன. ஒன்று மட்டும் கூட்டிற்குள்ளேயே இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் நான்கு குஞ்சுகளும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தித் தத்தி மேற் கூரையில் உள்ள கம்பங்களில் எல்லை மீறாமல், எல்லை தாண்டாமல் உட்கார ஆரம்பித்தன.
அதன் பிறகு இரண்டு நாள் அலுவலக விடுமுறை முடிந்து, அன்று பிளாட்பாரத்துக்கு வந்து, ஆவலாக மேற்கூரையில் காக்கைக் கூட்டைப் பார்த்தேன். அது வெறுமையாக இருந்த்து. அது சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் மனசுக்குள் இனம் புரியாத சந்தோஷமும் இருக்கவே செய்த்து. காக்கைகளுக்கு இறக்கை முளைத்துப் பறந்து வெளியில் செல்லத் தொடங்கியிருக்க வேண்டும். காக்கைகள் பறக்கும் பக்குவம் வரும்வரை மாய்ந்து மாய்ந்து இரை கொண்டு வந்தளித்த தாய்க்காகத்தின் முகம் நினைவில் வர நெகிழ்ச்சியாக இருந்தது.
யாரப்பா சொன்னது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஐந்தறிவென்று. எனக்கென்னவோ இவைகளுக்கு ஆறுக்கும் மேல் அறிவிருக்கும் என்று தோன்றுகிறது. ஏன்னா பெத்த குழந்தையை குப்பைத் தொட்டியிலும், அரசுத் தொட்டிலிலும், மருத்துவமனை வளாகத்திலும் விட்டுச் செல்லும் ஆறறிவு படைத்த சில பெண்களை விடவும் இந்த்த் தாய்ப்பறவைகள் உயர்ந்தவைதானே!
 

ஈழம் மலரும்

 IN AND OUT CHENNAI NOVEMBER 16 - 30 இதழில் வெளி வந்த என் கவிதை ‘ஈழம் மலரும்.  மீண்டும் இங்கு பதிவு செய்திருக்கிறேன்,  உங்களுக்காக.
ஈழம் மலரும்

மாலையிட்ட மணாளா உன்னை
மறு திங்கள் இழந்திட்டேன்
நெஞ்சில் பாய்ந்த குண்டு 
உன் உயிரைப் பறித்தாலும்
உதட்டுச் சிரிப்பைத்தான்
பறிக்க முடியவில்லையே.
உயிர் பிரியும் நேரத்தில்
என்னதான் நினைத்தாயோ?
என்னைத் தான் நினைத்தாயோ? நம்
மண்ணைத்தான் நினைத்தாயோ?

மங்கை என் முகம் உன் மனதில் பதியும் முன்னே
மண்ணைவிட்டு விண்ணை அடைய
என்னதான் தவறு செய்தாய்?
பொய், புனை சுருட்டு, கொலை, களவு
இல்லை, இல்லை, இல்லவே இல்லை
செய்ததொரு குற்றம் என்ன?
செய்த ஒரே ஒரு குற்றம்தான் என்ன?
மண்ணில் பிறந்ததுதானோ – இந்த
மண்ணில் பிறந்ததுதானோ?

நீ இல்லா உலகை விட்டுச் செல்ல
எனக்கு உரிமையும் இல்லை,
மனமும் இல்லை.
நினைவை சுமந்து நிற்கிறேன் – உன்
நினைவை சுமந்து நிற்கிறேன்.

மறு திங்கள் புரிந்தது
உன் நினைவை மட்டும் சுமக்கவில்லை
என் மணி வயிற்றில் நீ விட்டுச் சென்ற
கருவையும் சுமக்கிறேன் என்று
மகனோ மகளோ எதாக இருந்தாலும்
நம் மண்ணிற்குக் கிடைக்கப் போவது
ஒரு போராளி

ஐயிரண்டு திங்கள் சுமந்து
பெற்றெடுத்த உன் அருமை மகள்,
அன்பு மகள், ஆசை மகள், அழகு மகள்
கை வீசி, தளிர் நடை நடந்து,
மழலை மொழி பேசி,
பூப்பெய்தி உன் வழியில்
களம் சென்று நலம் துறந்து
பகைவர் உயிர் பறித்து
தன்னுயிர் நீத்தாள்.
உன்னுடன் இணைந்தாள்.

அன்று பத்துத் தலை அரக்கனை
அழிக்க ஒரு இராமன் வந்தான்

இன்று ஒத்தைத் தலை அரக்கர்களை
அழிக்க யார் வருவார்?

சுற்றமும், நட்பும் சூழ
குஞ்சும், குளுவானும்,
முதுமக்களும்
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கிறோம்,
செத்ததுபோக
மத்தவருக்காவது ஒருநாள்
ஈழம் மலரும் என்று –தமிழ்
ஈழம் மலரும் என்று

Tuesday 6 November 2012

ஆண் பாவம்


“அம்மா, அம்மா நாளைக்கு ஒனக்கு லீவு தான. எங்கயாவது வெளில போலாமாம்மா?” என்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த விமலாவைக்கேட்டான் மகேஷ்.

“என்ன மகேஷ், அம்மா இப்பதான் அலுவலகத்தில இருந்து உள்ள நுழையறாங்க. இப்பவே ஆரம்பிச்சுட்டயா?” என்று எதிர் கேள்வி கேட்டாள் வித்யா.

“போக்கா” என்றான் மகேஷ்.

“சரி சரி இதுக்காக ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க. நாளைக்கு சாயங்காலமா கண்டிப்பா எங்கயாவது போலாம்” என்றாள் விமலா.

“ஆனா ஒண்ணும்மா யார் வீட்டுக்கும் போக வேண்டாம்மா. வேற எங்கயாவது போலாம்மா” என்றாள் வித்யா. “ஆமாமாம் யார் வீட்டுக்கும் வேண்டாம்மா” என்றுஒத்து ஊதினான் மகேஷ் என்னவோ தெரிஞ்சமாதிரி.

”நீங்க ரெண்டு பேரும் வீட்டுப்பாடம் எல்லாம் எழுதி முடியுங்க. நான் போய் ராத்திரி சமையல முடிக்கறேன். நாளைக்கு எங்க போகலாம்ங்கறதை நீங்க ரெண்டு பேருமே முடிவு பண்ணுங்க. சரியா?” என்று சொல்லிவிட்டு புடவையை இழுத்து சொருகிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் விமலா. காலை அவசரத்தில் அப்படியே விட்டுச் சென்ற சமையலறையை நேர் செய்து வேலைக்காரி தேய்த்து பெரிய டப்பில் வைத்து விட்டுச் சென்றிருந்த பாத்திரங்களை எடுத்து அதனதன் இடத்தில் கவிழ்த்தாள்.
அப்படியே மனதில் நாளை செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டாள். ”முதல்ல கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கணும். நாளை சனிக்கிழமை. இவர் மதியத்திற்கு சாப்பாடு கொண்டு போக மாட்டார். அதனால் காலை சிற்றுண்டி மட்டும்தானே. இவரை அலுவலகத்திற்குக் கிளப்பி விட்டுட்டு குழந்தைகளுக்கு எண்ணை தேச்சுவிட்டு, நானும் தேச்சுக்கணும். அப்புறம் குழந்தைகளுக்குப் பிடித்த சமையல் செய்யணும். மிளகாய்ப் பொடி, அரிசி மாவு அரைக்க மிஷினுக்குப் போகணும். ஆ, மறந்துட்டேனே. பசங்களுக்கு கஞ்சி மாவு தயார் பண்ணணும். போன தடவை வாங்கின கேழ்வரகுல ஒரே கல். இந்த தடவை பாத்து வாங்கணும். வனஜா ஏதோ ஒரு பிராண்ட் பேர் சொன்னாளே. ஒரு பாக்கெட்ல கோதுமை, கேழ்வரகு, புட்டரிசி இன்னும் கஞ்சிக்கு தேவையானது எல்லாம் இருக்கும்,சுத்தமா இருக்கும்ன்னு அதைப்பாத்து வாங்கணும். வாங்கி வறுத்து கஞ்சி மாவு அரைக்கணும். கோடை ஆரம்பிச்சாச்சு, பருத்தி சேலைக்கெல்லாம் கஞ்சி போட்டு தேய்க்கக் கொடுக்கணும்” யோசிக்க யோசிக்க விமலாவின் பட்டியல் அனுமார்வால் போல் நீண்டு கொண்டே போனது.

மடமடவென்று ஒரு சாதம், ரசம், கூட்டு வைத்து அப்பளம் பொரித்து இரவு சமையலை முடித்து சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைத்துவிட்டு, அடுப்படியைத் துடைத்து சுத்தம் செய்து, குளித்துமுடித்து விமலா வரவும் ராகவன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.

நான்கு பேரும் சாப்பிட்டதும் மகேஷ் தூங்கி விட வித்யா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். விமலா படுக்கை அறைக்குள் வந்ததும் ராகவன், “விமலா, நாளைக்கு ரெண்டாவது சனிக்கிழமை. லீவு தானே. அம்மாவைப் பாத்துட்டு வரியா?” என்றான். விமலா காதில் விழாதது போல் பாவனை செய்துகொண்டு குழந்தைகள் மாடியிலிருந்து கொண்டுவந்து போட்டிருந்த காய்ந்த துணிகளை மடிக்கத் தொடங்கினாள்.

ராகவன், “விமலா உன்னைத்தான் கேக்கறேன். நாளைக்கு அம்மாவைப் பாத்துட்டு வரியா?” என்றான். வழக்கம் போல் சண்டை ஏதாவது வந்து விடுமோ என்று பயந்து இருவரையும் நிமிர்ந்து பார்த்த வித்யா மறுபடி எழுத ஆரம்பித்தாள்.

விமலா கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு மெல்லிய குரலில் “இல்லீங்க, நிறைய வேலை இருக்கு. இன்னொரு நாள் போறேன்” என்றாள்.
ராகவன், “உன்னால மாசத்துக்கு ஒரு தடவை கூட மாமியாரைப் பாத்துட்டு வர முடியாதா? இதே உங்கம்மா உள்ளூர்ல இருந்தா போகாம இருப்பியா?” என்றான்.

விமலா, “இங்க பாருங்க எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. இப்ப பேசக்கூட தெம்பு இல்ல. படுத்தா தேவலாம் போல இருக்கு. நாளைக்கு கார்த்தால பேசிக்கலாம். தயவு செய்து கொஞ்சம் புரிஞ்சுக்கங்க” என்றாள், வித்யா எதிரில் பேச வேண்டாமே என்ற அர்த்தத்தில். புரிந்து கொள்பவனாக இருந்தால்தான் தேவலாமே.

மறுபடியும் ராகவன், “எனக்கு பதிலை சொல்லிவிட்டு நீ என்ன வேணா செய் என்றான்”

விமலா “ஏங்க. என்னங்க நியாயம் இது? நமக்கு கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆகுது. இது வரைக்கும் ஒரே ஒரு வாரம் உங்கம்மா நம்ப வீட்ல வந்து இருந்து நம்ப குழந்தைகளுக்கு ஏதாவது செஞ்சிருக்காங்கன்னு சொல்லுங்க. நம்ப கஷ்டத்துக்கு எப்பவாவது வந்திருக்காங்களா? கேட்டா நீ பாட்டுக்கு பையைத்தூக்கிண்டு வேலைக்குப் போயிடுவ நான் என்ன உன் வீட்டுக்கு காவலான்னு கேக்கறாங்க. ஏதோ இன்னொரு பையன் இருந்து அவங்க வீட்டில இருந்தாலும் பரவாயில்லை. எப்பவும் பொண்ணு வீட்டிலேயே இருக்காங்க. இத்தனைக்கும் உங்க தங்கச்சி வேலைக்குக் கூட போகல. நீங்க என்னடான்னா எதையும் புரிஞ்சுக்காம பேசறீங்க. எனக்கும் மனசுக்குள்ள எவ்வளவோ இருக்குங்க. நாம்ப என்ன திருட்டுக்கல்யாணமா செஞ்சுட்டு வந்தோம். இவங்க பாத்து வெச்சதுதானே. கல்யாணம் ஆகி வந்தநாள்லேந்து அரிசின்னு அள்ளவும் ஆள் இல்ல உமின்னு ஊதவும் ஆள் இல்லங்கற மாதிரி இருக்கோம்” என்றாள்.

ராகவன் “அதெல்லாம் பத்தி நீ பேச வேண்டாம். போக முடியுமா முடியாதா அதை மட்டும் சொல்லு” என்று கோபமாகக் கேட்டான்.

விமலா ”இங்க பாருங்க என் வேலையெல்லாம் முடிச்சுட்டு நேரம் இருந்தா போறேன். என் பக்கத்து நியாயத்தையும் கொஞ்சம் கேளுங்க. போன மாசம் இரண்டாவது சனிக்கிழமை அன்னிக்கு நீங்க எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போய்ப்பாருன்னு சொன்னதால ரெண்டு குழந்தைகளையும் இழுத்துண்டு ரெண்டு பஸ் ஏறி இறங்கிப் போனா உங்கம்மா மாப்பிள்ளைக்குப் புடிக்கும்னு வடாம் போட்டிட்டிருந்தாங்க. மாவடு, ஆவக்கா எல்லாம் போட்டிட்டிருந்தாங்க. இதைப் பாத்து எனக்கு பிபி ஏறினதுதான் மிச்சம். குழந்தைங்களுக்கு சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்கல அவங்க. அப்புறம் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப்போனேன் நான். இதைப்பாருங்க, இனிமே உங்க அம்மாவை பாக்கணும்ன்னா நீங்க அழைச்சிட்டுப்போங்க. உங்க கூட வரேன். நான் இனிமே தனியா எல்லாம் போய் அவங்கள் பாக்கறதா இல்ல. நம்ப குழந்தைகளுக்கு வேண்டியதை லீவு நாள்லயாவது நான் செய்து கொடுக்க வேண்டாமா?” என்று சொல்லிவிட்டு மடித்த துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

பதில் பேச முடியாமல் ராகவன் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தான்.
வித்யா அம்மாவின் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு மெதுவாக, “ஏம்மா அப்பா இப்படி இருக்கார். எப்பப்பாரு உன்னை ஏதாவது சொல்லிண்டிருக்காரே”

விமலா ராகவன் தூங்கி விட்டான் என்று நினைத்துக் கொண்டு “அதுவா. அது ஒண்ணும் இல்ல வித்து. அப்பாவும் பாவம்தான். வெளியில போகும்போது உங்க அத்தை வீட்டுக்குப் போய் பாட்டிய பாத்திருப்பாரு. அவங்க என்னடா ஒம் பொண்டாட்டிக்கு என்னை வந்து பாக்கக்கூட முடியாதா, மரியாதை இல்லயா அப்படி இப்டின்னு ஏதாவது சொல்லி இருப்பாங்க. பாவம் அவர் என்ன பண்ணுவார். அங்க வாங்கி இங்க குடுக்கறார். நீ இதெல்லாம் காதில போட்டுக்காத. இந்த வருஷம் பொதுத் தேர்வில நல்ல மதிப் பெண் எடுக்கணும். அடுத்த வருஷம் நல்ல காலேஜ்ல சேரணும் இல்லயா?” என்றாள்.

விமலாவின் பேச்சில் உள்ள உண்மை ஒரு பக்கம் ராகவனை சுட்டாலும், “நல்ல வேளை மனைவியாவது நம்மைப் புரிந்து கொண்டிருக்கிறாளே” என்ற திருப்தியுடன் தூங்க ஆரம்பித்தான்.

கோடைத் திருவிழா


ராமுவின் கையில் மளிகை சாமான் பட்டியலைத் திணித்த வனஜா, ”நீங்க அலுவலகத்துக்குப் போகற வழியில இத மளிகைக் கடையில குடுத்துட்டு இன்னிக்கே சாமானை கொண்டு வந்து போட்டுடச் சொல்லிடுங்கோ, ஏன்னா மாசி மாசம் முடியறதுக்குள்ளயே வடாம் போட்டு முடிச்சாதான் சரியா இருக்கும்” என்றாள்.

அந்தப் பட்டியலைப் பார்த்த ராமு கிண்டலா, ”என்ன வனஜா, ஜவ்வரிசி 10 கிலோன்னு போட்டிருக்கியே? ஏதாவது மகளிர் சுய உதவிக்குழுவில சேர்ந்து வடாம், வத்தல் போட்டு வியாபாரம் பண்ணப்போறியா?” என்று கேட்டான்.

"நன்னாயிருக்கு. ஒரு வருஷத்துக்குக் காணறா மாதிரி வடாம், வத்தல், ஊறுகாய் எல்லாம் போட்டு வெச்சுக்க வேண்டாமா? உங்க அக்கா, தங்கைகள் நாலு பேருக்கும் குடுக்க வேண்டாமா? மிளகாய், பெருங்காயம்ன்னு ஒண்ணொண்ணா எதுக்குன்னு கேக்காதீங்கோ” என்று நொடித்தாள் வனஜா.

ராமுவுக்குத் தெரிந்து வனஜா ஒவ்வொரு வருடமும் நாத்தனார்களுக்கு சின்ன கவரில் வடாமும், ஸ்பூன் கூட உள்ளே போகாத சின்ன பாட்டிலில் மாவடுவும் போட்டு, “நான் கொஞ்சம்தான் வடாமும், மாவடுவும் போட்டேன். வீட்டுப்பொண்கள் சந்தோஷமா இருந்தாதான் வீட்டுக்கு வந்த பொண்களும் சந்தோஷமா இருப்பான்னு எங்கம்மா சொல்லுவா. ஏதோ பொன் வைக்கற இடத்தில பூ வைக்கிற மாதிரிதான்”னு சொல்லித்தான் கேட்டிருக்கான்.
ஆனா பிறந்த வீட்டுக்கு மட்டும் பெரிய பை நிறைய போட்டுக்கொடுப்பாள். அதற்கு வக்கணையா விளக்கமும் கொடுப்பாள். “எங்கம்மா பாவம். என்னோட ரெண்டு தம்பி பொண்டாட்டிகளும் வேலைக்குப் போயிடறா. அவா குழந்தேள கட்டி மேய்க்கணும். வயசான காலத்துல நாலு வால் குழந்தைகளை சமாளிச்சுண்டு வடாம் எல்லாம் போட முடியுமா? அதனாலதான் எங்கம்மாவுக்குக் கொஞ்சம் கூட கொடுத்தேன்”னு சொல்வாள்.

"அது சரி வனஜா. அது என்ன லெமன் சால்ட்” என்று கேட்டான் ராமு.

"அதுவா நாம என்ன ஹார்ட் ஆப் தி சிடிலயா வீடு கட்டியிருக்கோம்.
ஊர்க்கோடியில வீட்டைக் கட்டிட்டு ஒரு அந்த அவசரத்துக்குக் கூட தேவையானதை வாங்க முடியறதில்ல. போன தடவை இருபது எலுமிச்சம்பழம் வாங்கிப்போட்டு கூட உங்க அக்கா ‘என்ன வனஜா வடாத்துக்கு எலுமிச்சம்பழமே புழிய மாட்டியா’ ன்னு கேட்டா. எலுமிச்சம்பழத்துக்குப் பதிலாதான் லெமன் சால்ட். இது வெல கம்மி. உங்களுக்கு பணத்தை மிச்சம் பண்ணித்தான் குடுத்திருக்கேன்.” என்றாள் வனஜா.

எந்தப் பேச்சையுமே உங்கக்கா, உங்கம்மா என்றுதான் முடிப்பாள் வனஜா. ஒரு நாளைக்கு பத்து தடவையாவது ஊர்க்கோடியில வீட்டைக்கட்டியிருக்கேளேன்னு ராமுவை இடிச்சுக்காட்டுவா. அப்படி வீட்டைக்கட்டினதுக்கு வனஜா சந்தோஷப் படற ஒரே விஷயம் மாமியார் கமலத்தை கூட வெச்சுக்க முடியாததுக்குத்தான். நிரந்தர சர்க்கரை நோயாளியான கமலம் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்ததால் கோடம்பாக்கத்தில் இருக்கும் தன் மூத்த பெண் வீட்டிலேயே தங்கி விட்டாள். நல்லவேளையாக கமலம் தன் ஒரே தம்பிக்கே தன் மூத்த பெண்ணைக்கொடுத்திருந்ததால் ராமுவுக்கு அந்த விதத்தில் எந்த பிரச்னையும் இல்லை.

மாமா மிகவும் நல்லவர். ’நீ கவலைப்படாதேடா ராமு, எங்கக்காவை நான் பாத்துக்கறேன்’ என்பார். கமலமும் எதையும் பாராட்ட மாட்டாள். ஆனால் ராமுவுக்குத்தான் ஒரே மகனாக இருந்தும் அம்மாவைத் தன் கூட வைத்துக்கொள்ள முடிவில்லையே என்று வருத்தம். அதையும், வனஜா அழகாக மாமியாரிடம், ’அம்மா நீங்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கேள். இன்னும் பிறந்தாத்திலேயே இருக்கேளே’ என்பாள்.

இதற்குள் ராமுவின் பெண் வித்யா வந்து, “ஏம்மா, போன வருஷம் போட்ட வடாமே டப்பால நிறைய மிச்சம் இருக்கே. அப்புறம் ஏம்மா திரும்பியும் போடற. அப்பறம் கைவலி, கால் வலின்னு புலம்புவ” என்றாள். அவள் கவலை அவளுக்கு.

வனஜா மொட்டை மாடியில் போய் உட்கார்ந்துகொண்டு ‘வித்யா தண்ணி கொண்டுவா, ஒரு கரண்டி கொண்டுவா, அதைக்கொண்டுவா, இதைக்கொண்டுவா’ன்னு நச்சரிப்பா. போறாத்துக்கு வடாத்தை காக்கா கொத்தாம காவல் வேற இருக்கணும். இவ செய்யற அலம்பல் தாங்காம ராமுவின் பையன் சுரேஷ் நண்பர்களுடன் படிக்கப்போகிறேன் என்று கம்பி நீட்டி விடுவான்.

“மிச்சம் இருந்ததெல்லாம் தூள் வடாம்தான். கொஞ்சூண்டுதான் இருந்துது. கார்த்தால நம்ப கண்ணம்மாவுக்குக் குடுத்துட்டேன். அவளுக்கும்தான் பாவம் யார் வடாம் போட்டுக்குடுக்கப்போறா?” என்றாள் வனஜா.
"கொஞ்சூண்டா. கார்த்தால தோட்டத்துல செடிக்கு தண்ணி ஊத்திண்டிருந்தப்ப இதென்ன வேலைக்காரி கண்ணம்மா கையில இவ்வளவு பெரிய பை. பையில என்னதான் இருக்கும்னு யோசிச்சேனே. வடாம்தானா? அது சரி. இதுக்கு எண்ணெய் வாங்க கண்ணம்மாக்கு நீ குடுக்கற சம்பளம் போதாதே’ன்னு மனசுக்குள்ள நினைத்தான் ராமு. பின்ன வெளியே சொல்ல முடியுமா? இல்ல வனஜாவை கேக்கத்தான் முடியுமா?

ஒரு வாரம் வடாம் போடற வரைக்கும் வீடே அல்லோல கல்லோலப்பட்டுப் போயிடுத்து. தினமும் கார்த்தால ரசம், ராத்திரி மோர் சாதம். கேட்டா எப்பவும் போல ‘நான் என்ன பண்ணறது? ஒண்டியா எல்லா வேலையும் நானே செய்ய வேண்டி இருக்கு. ஒரு ஒருவாரம் பொறுத்துக்க முடியாதா? எப்பவும் தினுசு தினுசா சாப்டுண்டுதானே இருக்கோம்’ன்னு நீட்டி முழக்குவா. தேவையா இதெல்லாம். ராமு வாயே திறக்காம போட்டதை சாப்பிட்டுப் போயிண்டிருந்தான் எப்பவும் போல.

ஒரு வழியா வடாமெல்லாம் போட்டு முடிச்சு பத்துபடி டின்னுல பத்திரப்படுத்தி வெச்சா வனஜா. இன்னிக்காவது நல்ல சாப்பாடு கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.

வனஜா யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். “ஆமாமாம். அதெல்லாம் ரொம்ப சுலபம்தான். 10 கிலோ ஜவ்வரிசி வாங்கினேன். வடாம் போட்ட சிரமமே தெரியல. நிமிஷமா போட்டுட்டேன். ஆவக்கா, மாவடு எல்லாம் கூட போட்டுட்டேன். இதெல்லாம் கடையில வாங்கினா கட்டுப்படியாகுமா? அதோட எங்க வீட்டு நாக்கு நீண்ட தேவதைகளுக்கு கடையில வாங்கினா புடிக்காதே. அடுத்த வருஷம் இன்னும் நிறைய போடலாம்ன்னு இருக்கேன்” கணவன் வந்ததைக்கூட கவனிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.

"ஆஹா என்னமோ தினமும் இவ பஞ்சபட்ச பரமான்னம் செஞ்சு போட்டு நாங்க வரிஞ்சு கட்டிண்டு சாப்பிடற மாதிரிதான் பேச்செல்லாம்’. இது ராமுவின் எண்ண ஓட்டம்.

"சரி நாழியாயிடுத்து. எங்காத்துக்காரர் வந்துடுவார். அப்புறமா பேசறேன் உமா. நானே போன் பண்ணறேன். உங்கிட்ட மட்டும்தான் பேசி இருக்கேன். இன்னும் ரமா, ராதா, பாமா எல்லார்கிட்டயும் பேசணும். ”

ஆஹா இப்படி இவ பேசிண்டே போனா இந்த மாசம் தொலைபேசிக்கட்டணம் எவ்வளவு வருமோ? என்று நினைக்கும்போதே அடுத்த வருடம் வனஜா நீட்டப்போகும் மளிகை சாமான் பட்டியல் கண் முன்னே வந்து மிரட்ட பொத்தென்று சரிந்து சோபாவில் விழுந்தான் ராமு.

பிறவிப்பயன்

 
ஏனுங்க, யாராவது கொஞ்சம் தயவு செஞ்சு என் கதையக் கேளுங்களேன். ஒரு 5 நிமிஷம்தான். அதுக்கு மேல நேரம் எடுத்துக்க மாட்டேன். வாங்க அம்மணி, உக்காருங்க. ரொம்ப நன்றிங்க.

நமக்கு சொந்த ஊர் கோயம்புத்தூருங்க. அங்க மில்லுல பொறந்தோமுங்க. அங்க இருந்து சென்னைக்கு வந்து சேந்தோமுங்க. எங்கன்னு கேக்கறீங்களா? அதாங்க தி,நகர் ரங்கநாதன் தெருவில இருக்கே பெரிய அண்ணாச்சி கடை அங்கதானுங்க. அதுக்கப்புறம் என் பயண அனுபவத்தை விவரமா சொல்றேன். கேளுங்க.

***

மில்லுல எங்களையெல்லாம் ஒரு லாரில ஏத்தி அனுப்பி வெச்சாங்களா. ஒரு வழியா சென்னைக்கு வந்து சேந்தோமா.

“அப்பாடா விடுதலை கிடைச்சாச்சு. 10 நாளா எங்க எல்லாரையும் சேர்த்துக்கட்டி, அட்டை பெட்டிக்குள்ள அமுக்கிப்போட்டு, அம்மாடி, இப்பதான் மூச்சு விட முடியுது.

ஆ! தலை சுத்துதே”

“ஏய் விமலா பாத்துடீ. கீழ போட்டுட்டியே. அந்த மேனேஜர் பார்த்தா கத்துவான். சீக்கிரம் எடுத்து அடுக்கி வெச்சுடு.”

“கலா இந்த கலர் ரொம்ப அழகா இருக்கு இல்ல.”

“ம்ம். உன்னோட கல்யாணத்துக்கு வாங்கிக்கோ”

“ம். அதைப்பத்தி நினைக்கிற நிலைமையிலா நாம இப்ப இருக்கோம்”

இப்படி இந்த பொண்ணுங்க பேசறதை தினமும் கேட்டுக்கிட்டிருந்தேனுங்க. பாவங்க இந்த சின்னப் பொண்ணுங்க எல்லாம். சில சமயம் கிக்கிபிக்கின்னு சிரிச்சுப்பேசுங்க. திடீர்ன்னு அப்படியே மாறிடும். ஒண்ணுக்கொண்ணு ஆறுதல் சொல்லிக்கிட்டு என்னமோ வாழ்க்கை நடத்துதுங்க. அவங்க மூடுக்குத் தகுந்த மாதிரி என் மூடும் ஆயிடும்.

இப்படியே அந்தக் கடையிலேயே ஒரு ஆறு மாசம் இருந்தேனுங்க.

***

“ஏம்மா, அந்த ரெண்டு கட்டையும் இப்படி எடுத்து வைம்மா. எனக்கு ஒரு 100 வேணும். எனக்கு தேவையானத நானே பாத்து எடுத்துக்கறேன்” இப்படி கேட்டுக்கிட்டு ஒரு அம்மா வந்தாங்க.

என்னையும் சேர்த்து எடுத்து வெச்சாங்க. என்னை எடுத்து வைக்கும்போது மட்டும் அந்த விமலா பொண்ணு கண்ணுல ஒரு சின்ன ஏக்கம் தெரிஞ்சுது. (இல்ல என்னோட கற்பனையா இது).

ஒருவழியா பில் போட்டு வாங்கி எங்க எல்லாரையும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்தாங்க அந்த அம்மா. அவங்க பொண்ணு கிட்ட பையைக் கொடுத்து ”ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு கவர்ல போட்டு தனியா ஒரு கட்டப்பைல அடையாளமா எடுத்து வை. கல்யாணத்தன்னிக்கு கேட்டதும் டக்ன்னு எடுத்துக் கொடுக்கணும்”ன்னு சொன்னாங்க.

அந்தப்பொண்ணும் கவர்ல போடும்போது என்னை மட்டும் எடுத்து தனியா வெச்சு ’அம்மா, அம்மா இந்த கலர் ரொம்ப நல்லா இருக்கு. அண்ணன் கல்யாணத்துக்கு தெச்சுக்கறேம்மா’ன்னு கேட்டுச்சு.. (அப்ப கற்பனை இல்லை. இந்தப் பொண்ணுக்கும் என்னை புடிச்சிருக்கு பார்த்தீங்களா?).

அதுக்கு அந்தம்மா, ‘நீ என்ன புடவையா எப்பவும் கட்டிக்கப் போற? ஒனக்கு வாங்கிக் கொடுத்த புடவையிலயே இருந்த ரவிக்கையைத்தான் தெச்சுக்கிட்டயே. அப்புறம் இது எதுக்கு? அப்புறம் இதுக்கு ஏத்தா மாதிரி புடவை கேப்ப. எல்லாத்தையும் ஒழுங்கா எடுத்து வை”ன்னு சொன்னாங்க.

அந்தப் பொண்ணோட முகம் சின்னதா ஆயிடுச்சுங்க. எனக்கு ரொம்ப பாவமா இருந்ததுங்க. சின்னப் பொண்ணுதானங்க ஆசை இருக்காதா? என்ன இந்த அம்மணி சொந்தப் பொண்ணு கிட்டயே இப்படி கோவிச்சுக்கறாங்களே. வரப்போற மருமககிட்ட எப்டி பேசுவாங்களோ?

மறுபடியும் மூச்சு முட்டல். கிட்டத்தட்ட ஒரு மாசம் அந்தக் கட்டப்பைக்குள்ளயே இருந்தோமுங்க..

ஒருநாள் எங்க எல்லாரையும் கார் டிக்கில வெச்சு எடுத்துட்டுப்போனாங்க. இறங்கினா ஒரே சத்தம். மேள சத்தம். குழந்தைங்க விளையாடற சத்தம். பலவிதமான சத்தங்கள். ஓ, திருமண வீட்டுக்கு வந்துட்டோம். ஒரே ஒரு நாள் தாங்க அங்க இருந்தோம். மறுநாள் எங்க எல்லாரையும் பிரிச்சு ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பையில போட்டாங்க. தேங்காய், வெத்தல, பாக்கு கூடவே பட்சணம் வேற. ம். வாசனை ஜோர்தான். ஒவ்வொரு பையா எடுத்து ஒவ்வொருத்தர் கிட்ட கொடுத்தாங்க.

நான் போய் சேர்ந்தது யார்கிட்ட தெரியுமா? ஒரு ரெட்டை நாடி சரீர அம்மா கிட்ட. அவங்க கூட அவங்க வீட்டுக்குப் போய் சேர்ந்தேன். அவங்க என்னை கையில எடுத்து பார்த்துட்டு “ம் கலர் ரொம்ப நன்னாதான் இருக்கு. ஆனா எனக்குப் போறாதே. அழகா ஒரு பொண்ணைப் பெத்துண்டிருக்கலாம். ம் ரெண்டும் பையனா பெத்துண்டுட்டேனே’ன்னு சொல்லிட்டு என்னை அவங்க துணி அலமாரியில வெச்சுட்டாங்க. (இப்ப எனக்கு கர்வமே வந்துட்டுது. தப்புதாங்க).

நல்ல வேளை இங்க மூச்சு முட்டல. அதுல இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் பாருங்க, ராத்திரிதான் தெரிய வந்துது. அந்த அலமாரி இருந்தது அவங்க வீட்டு குளிர் சாதன வசதி செய்யப்பட்ட படுக்கையறையில. ஆஹா! குளு குளுன்னு ரொம்ப ஜாலிதான் போங்க. ஒரு ஆறு மாசம் அங்கதான் குடித்தனம்.

அப்புறம் அந்த அம்மா நவராத்திரி வருதுன்னு அலமாரியில என்னை மாதிரி சேர்த்து வெச்சிருந்த எல்லாரையும் எடுத்து வெளியில வெச்சாங்க. பழையபடி கவருக்குள்ள போயிட்டேன். இப்ப குளிர்சாதன அறையிலே இருந்து எங்களை வேற ஒரு அறையில கொண்டு வெச்சுட்டாங்க. அடுத்து யார் கிட்ட போய் சேர்ந்தேன் தெரியுமா?

அந்த அம்மா அவங்க வீட்டில வேல செய்யற கண்ணம்மாவுக்கு என்னை வெத்தல பாக்கோட வெச்சுக்கொடுத்தாங்க. கண்ணம்மாவோட வீட்டுக்குப்போனேனா, சின்ன குடிசை வீடுங்க. பாவம். அவங்க வீட்ல என்னை பத்திரமா வெச்சுக்க ஒரு பெட்டி கூட இல்லங்க. அவங்க பொண்ணு கிட்ட என்னை குடுத்தாங்க.

அந்தப் பொண்ணு, ‘அம்மா, அம்மா இதை நான் தெச்சுக்கறேம்மா, நல்லா இருக்கும்மா கலர்’ன்னு கெஞ்சிக்கேட்டாங்க. அதுக்கு அந்த கண்ணம்மா, ‘ம். இத்தை குடுத்ததுக்கு அந்தம்மா கட்டி பழசாப்போன பொடவையும் ஜாக்கெட்டும் குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும். இதுக்கு கூலி குடுக்க நாம எங்க போறது. தெருக்கோடில இருக்கற தையற்காரனே 50 ரூபா கேக்கறான் ஜாக்கெட்டு தெக்க. இன்னா பண்றது. எதுனா பையில போட்டு வை. தீபாவளிக்கு யார் வூட்லனா போனஸ் குடுப்பாங்க இல்ல. அப்ப தெச்சு தரேன்” ன்னு சொன்னாங்க. இப்ப எனக்கு முன்ன மாதிரி கர்வம் இல்லைங்க. பின்ன என்னங்க, பிறவிப்பயன அடையாம இப்படி சுத்திக்கிட்டே இருந்தா? அதோட இந்த ஒலகத்தில ஒவ்வொருத்தரும் படற கஷ்டத்தைப் பாத்தப்புறம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க.

சரி. என் கதையை விடுங்க. முடிஞ்சா ஒரு 50 ரூபா இந்த கண்ணம்மாக்குக் குடுத்து ஜாக்கெட் தெச்சுக்க உதவுங்களேன்.

எங்க கிளம்பிட்டீங்க. ஏனுங்க அம்மணி. எனக்கு ஒரு பதில சொல்லிப்போட்டுத்தான் போங்களேன்.

எதிர்பார்ப்பு



வா ரமா. வா வா.. சௌக்கியமா இருக்கியா? இப்பதான் உன் பையன் சாவியக் குடுத்துட்டு விளையாடப் போனான். சாப்பிட்டானோ என்னமோ தெரியல.”

எதிர் வீட்டு ரமாவை முகமலர்ந்து வரவேற்றாள் வித்யாவின் பாட்டி விசாலம்.

“நான் நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க எப்ப வந்தீங்க, எப்படி இருக்கீங்க” என்று கேட்டாள் ரமா.

“ம். என்னமோ இருக்கேன் போ. காடு வா வாங்குது. வீடு போ போங்குது. ஆமாம் நான் வந்து ரெண்டு நாளாச்சு. கண்ணுலயே படலயே நீ. உனக்கு ஏது நேரம். சரி சரி. ஆபீஸ்லேந்து களைச்சுப்போய் வந்திருக்க. இரு. ஒருவாய் காபி போட்டுத்தரேன். குடிச்சுட்டு சாவியை வாங்கிண்டு போகலாம்.”

“பரவாயில்ல பாட்டி. இந்த வயசான காலத்தில எதுக்கு உங்களுக்கு சிரமம். நான் கிளம்பறேன் பாட்டி.” என்றாள் ரமா.

“இரு ரமா. இதுல என்ன சிரமம். உனக்கும் யார் இருக்கா. நீயே போட்டுத்தானே குடிக்கணும். நான் என்ன உனக்குன்னு தனியாவா காபி போடப்போறேன்? உள்ள வித்யா படிச்சுண்டிருக்கா. அவளுக்கு காபி போடப்போறேன். அப்படியே உனக்கும் போட்டுண்டு வரேன். சித்த உக்காரு” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் விசாலம். பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்தாள் வித்யா. இதற்குள் இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து ரமாவிடமும், வித்யாவிடமும் கொடுத்தாள்.

“என்ன வித்யா எப்படி படிச்சிண்டிருக்க” என்று ரமா கேட்க, தலையை ஆட்டினாள் வித்யா. “காபி ஏ ஒன் பாட்டி. என்ன வித்யா காபியைக் குடிக்காம என்ன யோசனை. ம். நீங்கள்ளாம் ரொம்பக் குடுத்து வெச்சிருக்கீங்க. சாவியைக் குடு. நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் ரமா.
* * * 

’கேட் திறந்திருக்கு போலிருக்கே. அத்தையாத்துக்குப் போறேன்னு சொன்னாளே பாட்டி கிளம்பலையோ? ஒரு வேளை வித்யா பள்ளிக்கூடத்தில இருந்து வந்துட்டாளோ? ஸ்பெஷல் க்ளாஸ் இல்லயோ? எப்படியும் அம்மாவோ, அப்பாவோ இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது’ என்று பலவாறு யோசித்துக்கொண்டே வந்த விஜயா கதவைத் தட்டினாள். கதவு தானாகவே திறந்து கொண்டது. யூனிபார்மைக்கூட மாற்றாமல் மேஜையில் தலைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் விஜயாவின் தங்கை வித்யா.
“வித்யா! என்ன இது பட்டப்பகல்ல கதவைத் திறந்து போட்டுண்டு தூங்கற. எழுந்திரு. எழுந்திரு. டிபன் பாக்ஸ் அப்படியே இருக்கு. சாப்பிடவே இல்லையா?” என்று தூங்கிக் கொண்டிருந்த தங்கையைத் தட்டி எழுப்பினாள் விஜயா.

சோம்பல் முறித்தபடி எழுந்து உட்கார்ந்தாள் வித்யா. “என்ன வித்யா டல்லா இருக்க. பாட்டி அத்தையாத்துக்குக் கிளம்பிப் போயிட்டான்னு வருத்தமா?” என்று கேட்டாள் விஜயா.

“ம்க்கும். இருந்தா மட்டும் அப்படியே நம்பள ரொம்ப கவனிச்சுண்டுவாளாக்கும்”.

“பெரியவாளை அப்படி எல்லாம் சொல்லக்கூடாது வித்யா” என்றாள் விஜயா.
வித்யாவுக்கும், விஜயாவுக்கும் எட்டு வயது வித்தியாசம். அவர்கள் சின்னக் குழந்தைகளாக இருந்தபோது பாட்டி இவர்கள் வீட்டிற்கு எப்போதோ ஒரு முறைதான் வருவாள். பெரும்பாலும் தன் பெண் வீட்டிலேயே இருந்து விடுவாள் விசாலம். வித்யா, விஜயா இருவருமே க்ரீச்சில்தான் வளர்ந்தார்கள். அதனால்தானோ என்னவோ இருவருக்குமே பாட்டியிடம் ஒட்டுதலே இல்லை. பாட்டியும் இவர்களைக் கண்டு கொள்ள மாட்டாள். ஆனால் விளையாட ஒரு துணையில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த விஜயாவுக்கோ வித்யாவின் வருகை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அதனாலேயே தங்கை வித்யா அவளுக்கு ரொம்பச் செல்லம். வித்யாவும் எந்த ஒரு விஷயமானாலும் அக்காவிடம்தான் சொல்வாள். ஏன் பாட்டியோ, அப்பாவோ ஏதாவது சொல்லி அதனால் அவள் அம்மா புலம்பினால் கூட விஜயாதான் “அம்மா இதெல்லாம் காதுல போட்டுண்டு உன் உடம்பையும் மனதையும் கெடுத்துக்காதே” என்று உற்ற தோழியைப் போல் ஆறுதல் சொல்வாள்.

‘பாவம் தான் வித்யா. நான் படிக்கும் போதாவது அம்மாவுக்கு சனி, ஞாயிறு ரெண்டு நாள் லீவு இருந்தது. ஆனா இப்ப ஞாயிறு மட்டும்தான் லீவு. பிரமோஷனும் வந்தப்பறம் அம்மாவால் வித்யாவ சரியா கவனிக்க முடியல. லீவும் போட முடியல. வீட்டுக்கும் லேட்டாத்தான் வரா. அப்பா கேக்கவே வேண்டாம். என்னமோ கம்பெனியே இவர் தலையிலதான் ஓடற மாதிரி இழுத்துப்போட்டுண்டு வேலை செய்வார். வீட்டைப் பொறுத்த வரைக்கும் சம்பளக் கவரை அப்படியே அம்மா கிட்ட குடுக்கறதோட தன்னோட கடமை முடிஞ்சுடறதா நினைச்சுண்டிருக்கார். இந்தப் பொண்ணு வித்யாதான் பாவம் வீட்டில தனியா இருக்க வேண்டி இருக்கு.’.

“அக்கா!” விஜயாவின் எண்ண ஓட்டத்தைத் தடை செய்தது வித்யாவின் அழைப்பு. “என்னக்கா, நீ இன்னிக்கு அதிசயமா ஆபீஸ்லேந்து சீக்கிரமா வந்துட்ட” என்று கேட்டாள் வித்யா.

“அதுவா. எங்க பாஸ் யாரையோ பார்க்க ஏர்போர்ட் போறார். போற வழியில தானே உன் வீடு. உன்னை இறக்கி விட்டுட்டுப் போறேன்னு அதிசயமா சொன்னார். அதான் நானும் அதிசயமா சீக்கிரம் வந்துட்டேன்” என்று சொல்லி விட்டுத் தங்கையின் மூக்கைச் செல்லமாகத் திருகினாள் விஜயா.

“அக்கா. நீயாவது வேலையை விட்டுட்டு வீட்டிலயே இருக்கக் கூடாதா?” என்று அழ மாட்டாக்குறையாய் கேட்டாள் வித்யா.

’ஓ, இந்தப் பெண்ணை தனிமைதான் காயப்படுத்தி இருக்கு. காயத்துக்கு மருந்து போடணுமே’.

“வித்தும்மா. முதல்ல நான் ஏதாவது டிபன் பண்ணறேன். நாம ரெண்டு பேரும் அதை சாப்டுட்டு கோவிலுக்குப் போயிட்டு அப்டியே மார்க்கெட்டுக்குப் போயிட்டு வரலாம். கார்த்தாலயே அம்மா ஒரு காயும் இல்லன்னு அப்பளாத்தைப் போட்டு வத்தக்குழம்பு தானே பண்ணினா. அம்மா வரதுக்குள்ள ராத்திரி சமையலையும் முடிச்சு அம்மாவுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் கொடுக்கலாம்” என்றாள் வித்யா.

* * * 

கோவிலைச் சுற்றி விட்டு வெளிப் பிரகாரத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்தார்கள் விஜயாவும், வித்யாவும்.

வித்யா, “அக்கா எனக்கு ஒரு விஷயம் புரியல. பாட்டி நமக்கு ஒரு நாளும் எதுவும் செஞ்சதில்ல. ஆனா நேத்திக்கு ரமா ஆன்ட்டி வந்த போது என்னமோ எனக்காக காபி போடறதா சொல்லி அவங்களை ரொம்ப உபசாரம் பண்ணினா. அவங்க பையன் சாவி குடுக்க வந்த போது அவன் வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்லச் சொல்ல அவன் கையில கேக்கையும், பிஸ்கெட்டையும் திணிச்சா. அம்மா என்னடான்னா ரமா ஆன்ட்டியோட மாமியார் நம்பாத்துக்கு வந்தப்போ உங்களுக்கு பி.பி. இருக்கு. உடம்பைப் பார்த்துக்கோங்கன்னு ரொம்ப அக்கறையா சொன்னா. காபி வேண்டாம்ன்னு ஹார்லிக்ஸ் போட்டுக்குடுத்தா. ரமா ஆன்ட்டி நீங்கள்ளாம் குடுத்து வெச்சிருக்கீங்க அப்டீங்கறாங்க. அவங்க மாமியார் என்னடான்னா நம்ப அம்மாவுக்கு நல்ல மருமகள்ன்னு சர்டிபிகேட் குடுக்கறாங்க. ஆனா இந்த மாதிரி அம்மா பாட்டி கிட்டயும், பாட்டி அம்மா கிட்டயும் நடந்துண்டா எவ்வளோ நன்னாயிருக்கும்” மூச்சு விடாமல் படபடவென்று தன் மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தாள் வித்யா.

‘இதென்ன இது. இந்தப் பெண் தேவையில்லாத விஷயங்களைப்போட்டு குழப்பிண்டிருக்கே. குழந்தையும் இல்லாத, குமரியும் இல்லாத இவளுக்கு எப்படி புரிய வைக்கறது?’

“வித்யா, பாட்டி என்னிக்கோ ஒரு நாளைக்கு காபி போட்டுக் குடுத்தாலே ரமா ஆன்டிக்கு சந்தோஷம். அதே மாதிரிதான் அவங்க மாமியாருக்கும். அம்மா ஒரு நாள் உபசாரம் பண்ணினதுலேயே திருப்தியாயிட்டா. ஆனா இவங்க விஷயம் அப்படியில்ல. அம்மா தன்னை தினமும் கவனிக்கணும்ன்னு பாட்டியும், பாட்டி நமக்கு தினமும் ஏதாவது செய்யணும்ன்னு அம்மாவும் எதிர்பார்க்கறா. எல்லா மாட்டுப்பெண்களுக்கும் தன் மாமியாரைத் தவிர மத்த எல்லா மாமியார்களும் நல்லவாளா தெரியறா. அதே மாதிரிதான் மாமியார்களுக்கும்.

இதெல்லாம் இப்ப உனக்குப் புரியாது. தேவையும் இல்ல. வித்யா நீ இப்ப பத்தாவது படிக்கற. இன்னும் ஆறு, ஏழு வருஷங்களுக்கு நீ படிப்பைத் தவிர வேற எந்த விஷயத்திலயும் கவனம் செலுத்தக்கூடாது. என்னாலதான் டிகிரிக்கு மேல படிக்க முடியல. நீயாவது நிறைய படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். அதனால இதையெல்லாம் கவனிக்காம படிப்பை மட்டும் கவனி. எனக்கு நேரம் கிடைக்கறப்ப எல்லாம் நம்ப ரெண்டு பேரும் இந்த மாதிரி எங்கயாவது இந்த மாதிரி வரலாம். ஆனா அது கூட உன் படிப்பை பாதிக்காமதான். சரியா?” என்றாள் விஜயா.

தன் அக்கா சொல்வது எதுவும் தன்னுடைய நல்லதிற்குத்தான் என்ற நம்பிக்கையுடன் தலையாட்டினாள் வித்யா.

தங்கையின் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் விஜயா. இருவரும் கை கோர்த்துக்கொண்டு மார்க்கெட்டுக்குப் புறப்பட்டனர்.


சிறுதுளி பெரு வெள்ளம்





மின் விநியோகம்
சீராக இல்லாத
இந்த நேரத்திலும்,
கடைத் தெருக்களிலும்
திருமணக் கூடங்களிலும்
பொது இடங்களிலும்
சரம், சரமாய்
மின் விளக்குகளை
ஏற்றி வைத்திருப்பதைப்
பார்க்கும்போது
மூக்குக்கு மேல்
கோபம்தான் வருகிறது.

ஆனால்
அலுவலகத்தில்
ஆளில்லாத நேரத்தில்
மின் தூக்கியில்
சுற்றிக்கொண்டிருக்கும்
மின் விசிறியை
நிறுத்தும் போதும்

வீட்டிலும்
அலுவலகத்திலும்
ஆளில்லாத இடங்களில்
சுற்றிக் கொண்டிருக்கும்
மின் விசிறிகளை
நிறுத்தும்போதும்
தேவையில்லாமல்
எரிந்து கொண்டிருக்கும்
மின் விளக்குகளை
அணைக்கும்போதும்

ஒரு அல்ப சந்தோஷம்
ஏற்படுகிறதே!

என்ன இருந்தாலும்
‘சிறு துளி
பெருவெள்ளம்
அல்லவா?

Saturday 3 November 2012

பிரபலங்களின் வாழ்வில்


பிரபலங்களின் வாழ்வில் மகிழ்ச்சி, நகைச்சுவை, சோகம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கும்.  இது போன்று நாம் படித்த, கேள்விப்பட்ட, பார்த்த நிகழ்ச்சிகளை இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்கிறேன்.
இது போன்ற நிகழ்ச்சிகள் நமக்கு படிப்பினையாக அமையலாம். ஏன், சில நிகழ்ச்சிகளிலிருந்து நம் பிரச்சினைகளுக்கு விடைகூட கிடைக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை கிடைக்கலாம்.  



முதல் பதிவாக ஒரு நகைச்சுவைப் பதிவுடன் ஆரம்பிக்கிறேன்.
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனேஇம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.
ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ